
சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கடைசி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை தமிழகத்துக்கு ராகுல் காந்தி வருகை தரவுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் முதல்வருடன் இணைந்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னனும் ஐந்து நாட்களே மீதமுள்ள நிலையில் ராகுல் காந்தி இன்னமும் தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகை தராமல் உள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் ராகுல் காந்தி தமிழகத்துக்கு வராமல் இருப்பதை எதிர்கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை ராகுல் காந்திக்கே இல்லையென பேசி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வருகை தரவுள்ளார். இதனையடுத்து அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே பயணத்திட்டம் போடப்பட்டு இருக்கிறது. இரண்டும் குழம்பி விடக்கூடாது. எனவே அவர் ஒருப்பக்கம் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் மற்றொரு பக்கம் பரப்புரை மேற்கொள்வோம்.
பயணத்திட்டத்தை மாற்றினால் கிட்டத்தட்ட 30 தொகுதிகள் பிரச்சாரம் பாதிக்கும். அவரும் திமுக கூட்டணிக்கு தான் ஓட்டு கேட்க போறாரு. நாங்களும் அவருடைய கூட்டணிக்கு தான் ஓட்டு கேட்கிறோம் என பதிலளித்துள்ளார்.
