உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்  தொடர்ந்து இருந்தால் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளில் பங்கேற்க முடியாது என்பதால் திமுகவில் இருந்த 1,000 ஒன்றியச் செயலாளர்களில் திடீரென 113 பேர் தவெக பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மிரண்டு போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் உடனடியாக திமுகவின் அவசர பொதுக்குழுவை கூட்டி அமைப்பு தேர்தலை நடத்தவும், மாவட்டங்களை பிரித்து இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து திமுக மீண்டு வருவதற்குள், கட்சியின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மொத்தமாக மாற்று முகாமிற்குத் தாவியிருப்பது அறிவாலய வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

திமுகவில் இருந்த சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்களில், திடீரென 113 பேர் மொத்தமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்துள்ளனர். இந்தத் தகவல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்கும், மிரட்சிக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் கட்சியைச் சீரமைக்க அவர் போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளார்.

திமுகவின் தேர்தல் தோல்விக்குப் பின் அக்கட்சியின் உட்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, தவெக தலைமை இந்த ரகசிய ஆப்ரேஷனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் 113 ஒன்றியச் செயலாளர்கள் ஒரே நேரத்தில் தவெக பக்கம் சாய்ந்திருப்பது திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பைப் பதம் பார்த்துள்ளது.

தேர்தல் தோல்வியைக் காட்டிலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த அளவுக்குக் கசிவது திமுக தலைமைக்குத் தர்மசங்கடத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்கட்சித் துரோகிகளைக் கண்டறியும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தால் சுதாரித்துக் கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாகச் சேதத்தைத் தடுக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, திமுகவின் அவசர பொதுக்குழுவைக் கூட்டி, உடனடியாக உள்கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கிவிட்டு, புதிய முகங்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியைத் தற்காத்துக் கொள்ளவும், தவெக-வின் இளைஞர் ஈர்ப்பு வியூகத்தை முறியடிக்கவும் திமுக தற்போது புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.

திமுகவில் அமைப்பு ரீதியிலாக இருக்கும் மாவட்டங்களை அதிகரித்து, அதில் 50 வயதிற்கு குறைவானவர்களை பொறுப்புக்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சீனியர்கள் பலரையும் பொறுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டங்கள் அதிகளவில் பிரிக்க திமுக தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *