தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 23 -ஆம் தேதிக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் நீண்ட இழுபறிக்கு பின்னரே தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

அந்த வகையில் பாஜக இன்னமும் தன்னுடைய தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருக்கிறது.இது குறித்து பல கட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த சூழலில் நாளை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை டிநகரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் மயிலாப்பூரில் தனக்கு அபரிமிதமான ஆதரவு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் இந்த தேர்தல் அறிக்கையை ஐடிசி நட்சத்திர விடுதியில் பாஜகவின் ஜே.பி நட்டா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் வெளியிடுவர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து எதிர்க்கட்சியை விமர்சித்த தமிழிசை சௌந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்கள் பிரச்சனை மற்றும் திட்டங்கள் குறித்து பேசாமல் மேம்போக்காக பேசி வருவதாக விமர்சித்தார். மேலும் தொகுதி வரையறை குறித்து ஏற்கனவே மோடி, அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளித்து விட்டனர் எனவும், ஆனாலும் எதோ தென்னாடு வஞ்சிக்கப்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கவே முதலமைச்சர் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் “முதலமைச்சர் என்றால் உழைத்து தான் ஆக வேண்டும் எல்லா முதலமைச்சரும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அர்த்தமே இல்லாமல் உதயநிதி முதல்வரின் உழைப்பை போற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கிறது” என விமர்சித்து இருந்தார்.

திமுகவின் வாக்குறுதிகள் குறித்த பேசிய அவர், தேர்தலை முன்னிட்டு ரூபாய் 8,000 மதிப்பிலான டோக்கனை கொடுத்து வாக்கு சேகரிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என கூறிய தமிழிசை அவர் ஓபிஎஸ் அவர்களே இந்த 8000 ரூபாய் டோக்கனை கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது என விமர்சித்தார்.

தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள் முதலமைச்சர் என்ன கூறினாலும் தலை ஆட்டுகின்றனர் , எதையும் படிப்பதில்லை என்று அவர் சாடினார். மேலும் அவர் பேசுகையில், “நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது பற்றி நிர்மலா சீதாராமன் மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். நெல்லை உற்பத்தி செய்யும் பொழுது விவசாயிகளுக்கான பண முதலீடு அவர்களுக்கான வியாபாரம் லாபமும் கிடைப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு இன்னும் அதிக லாபம் பெற்று இன்னும் அதிக முதலீடு செய்து அதன் மூலம் செல்வந்தர்களாக ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதுதான் சொல்லியிருக்கிறார்கள்.

நெல் உற்பத்தியில் இருந்து, நவீன விவசாயத்திற்கு வாருங்கள் அதன் மூலம் அதிக பல அடைவீர்கள் என்று சொன்னதை , முதலமைச்சர் அப்படியே திரித்து பேசியிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

அதற்கு பதில் அளித்த அவர், “திருமாவளவன் குழம்பி போய் உள்ளார் , பாண்டிச்சேரியில் ஒரு மாதிரி உள்ளார், தமிழ்நாட்டில் ஒரு மாதிரி உள்ளார். துணை முதலமைச்சர் பதவி கேட்டிடுவாரோ என்ற அழுத்தத்தில் திமுக அவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று அவர் பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *