சாதாரண பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், இன்று மேற்குலக நாடுகளை அதிர வைத்திருப்பதுதான் இப்போது ‘ஹாட்’ டாப்பிக்.
அமெரிக்க நிதி ஆலோசகரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், குழந்தை பாலியல் குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி. இவரோடு பழக்கம் கொண்டிருந்த உலகின் செல்வாக்குமிக்க மனிதர்கள், அவர் மறைவுக்குப் பின்னரும் அவரது வழக்கில் தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வருகின்றனர்.
‘எப்ஸ்டீன் ஆவணக் கோப்பை வெளியே கொண்டுவருவேன்’ என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி, பல பெரும் தலைகள் இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கின்றனர்.
ஆவணக் கோப்புகள்

இந்த நிலையில்தான், டிசம்பர் 19, 2025 அன்று, சுமார் 3,965 கோப்புகளுடன் (3 ஜிபி தரவு) ஆயிரக்கணக்கான பி.டி.எஃப் கோப்புகள், நடுவர் மன்றப் பதிவுகள் மற்றும் விமானப் பயணப் பதிவுகளை `தி எப்ஸ்டீன் லைப்ரரி’ என்ற பெயரில் இணையதளத்தில் வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை.
மீண்டும் டிசம்பர் 23 அன்று, சுமார் 30,000 பக்கங்கள் கொண்ட 11,000 கோப்புகளை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற விமானப் பயணப் பதிவுகள் மூலம், டிரம்ப், முன்பு அறியப்பட்டதைவிட அதிகமான முறை எப்ஸ்டீனின் தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
