2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு தரப்பும் பரஸ்பர சமரசத்தின் மூலம் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் படி, தேமுதிகக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி பிரேமலதா விஜயகாந்துக்கு இருந்தது. குறிப்பாகத் தொகுதி எண்ணிக்கையில் அதிமுக கறார் காட்டியதால், தேமுதிக தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி யோசிக்கத் தொடங்கியது.

தமிழக வெற்றி கழகம் (விஜய்) மற்றும் நாம் தமிழர் கட்சி (சீமான்) ஆகியவற்றுக்கு மாற்றாக, ஒரு வலுவான வாக்கு வங்கி கொண்ட கட்சியைத் தன் பக்கம் இழுக்க திமுக விரும்பியது. கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அவர் மீது மக்களிடையே நிலவும் அனுதாப அலையை அறுவடை செய்ய, தேமுதிகவை வாரி அணைக்கத் தயார் நிலையில் இருந்தது திமுக.

கடந்த சில மாதங்களாகவே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன் முதற்கட்டமாக, திமுகவின் ஆதரவுடன் தேமுதிகவின் எல்.கே. சுதீஷுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதுவே திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானதற்கான முதல் அதிகாரப்பூர்வ சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.

மார்ச் 24 இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், தேமுதிகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த முறை அதிமுகவிடம் 15-க்கும் மேல் கேட்ட தேமுதிக, இப்போது திமுகவிடம் 10 இடங்களைப் பெற்றுள்ளது. இது மற்ற கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் சிபிஎம் ஆகியவற்றை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *