
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாமக பிளவுபட்டு நிற்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பதை பற்றி ராமதாஸ் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அன்புமணி ராமதாஸ் அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறார். (PMK Ramadoss)
ராமதாஸ் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை. மாம்பழம் சின்னத்தை கைப்பற்ற ராமதாஸ் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அன்புமணி மீது அவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரித்தது திமுக தான் என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் செய்ய எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. ராமதாஸ் தங்கள் கூட்டணியில் இணைந்துவிடுவார் என்ற அதிமுக கூட்டணியின் கனவு நிறைவேறுவது போல தெரியவில்லை. மறுபக்கம் ராமதாஸ் திமுக அல்லது தவெக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறிய ராமதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய காந்திமதி ராமதாஸ், “சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் இன்று (மார்ச் 16) அறிவிக்கவுள்ளார். அந்தக் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி கூட்டணியாக ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
